சிவாஜி கூப்பன் விற்ற ரஜினி ரசிகர்கள் கைது!
சென்னை:சிவாஜி படத்தின் கூப்பனை விற்றதாக 2 ரஜினி ரசிகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூரில் ராக்கி தியேட்டர் உள்ளது. இந்தத் தியேட்டரில் சிவாஜி படம் ரிலீசாவதாகவும், படத்தைக் காண்பதற்கான முன்பதிவு கூப்பனை 200 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என சங்கர் மற்றும் சதாசிவம் ஆகிய இரு ரஜினி ரசிகர்களும் தட்டி வைத்து கூப்பனை விற்று வந்தனர்.
இதுகுறித்து ராக்கி தியேட்டர் மேலாளருக்குத் தகவல் தெரிய வந்தது. தங்களது தியேட்டர் பெயரைக் கூறி கூப்பன் விற்பதாக அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் இரு ரசிகர்களையும் கைது செய்தனர்.
சிவாஜி தமிழா? பரிதி நழுவல்!:
இதற்கிடையே, சிவாஜி படப் பெயர் தமிழா இல்லையா என்று சட்டசபையில் சூடான விவாதம் நடந்தது.
சட்டசபையில் இன்று செய்தித்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராமன், தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு அரசு வரிச் சலுகை அளித்து வருகிறது. இதனால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
விரைவில் வெளிவரவுள்ள சிவாஜி படத்தின் பெயர் தமிழா, அப்படத்துக்கும் வரிச் சலுகை உண்டா என்பதை அரசு விளக்க வேண்டும் என்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தக் கேள்விக்கு அமைச்சர் பரிதி இளம்வழுதி நேரடியாக பதில் தரவில்லை. பிறகு சொல்கிறேன் என்று மட்டும் கூறி அமர்ந்து விட்டார்.












Click it and Unblock the Notifications