போலி என்கவுண்டர்: 2 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
அகமதாபாத்:குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் 3 பேரை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜ்குமார் பாண்டியன், வன்சாரா ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அகமதபாத்தைச் சேர்ந்த சொராப்தீன் ஷேக்கையும் அவரது மனைவி கெளசர் பீபியையும் காவல்துறையினர் பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
இதில் ஷேக்கை போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இதை நேரில் பார்த்த பிரஜாபதி என்பவரையும் போலீஸார் சுட்டுக் கொன்றனர். கெளசர் பீபியையும் கற்பழித்து கொலை செய்து எரித்து விட்டனர்.
இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பாக வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் உள்ளிட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களில் வன்சாரா மற்றும் ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைச் சரக டிஐஜியாக இருந்தவர் வன்சாரா. ராஜ்குமார் பாண்டியன் உளவுப் பிரிவு எஸ்.பியாக, இருந்தார்.
இதற்கிடையே, வன்சாராவின் சொந்த கிராமமான இல்லால் கிராமத்தில், அவரது வீட்டில் சிஐடி போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வன்சாராவின் வீட்டில் உள்ள கிணற்றில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டுள்ளது. இந்த அறைக்குக் கீழ்தான் கெளசர் பீபியின் கருகிய உடல் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த அறையை இடித்து விட்டு கிணற்றில் தோண்டும் பணி நடந்து வருகிறது.
லோக்சபா, ராஜ்யசபா ஸ்தம்பிப்பு:
இந்த நிலையில், போலி என்கவுண்டர் விவகாரம் இன்றும் நாடாளுமன்றத்தைக் கலக்கியது.
மக்களவை கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என இடதுசாரி உறுப்பினர்களும், காங்கிரஸாரும் கோரிக்கை விடுத்தனர் ஆனால் இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி முயற்சித்தார். ஆனால் அமளி குறையவில்லை. இதையடுத்து ஒரு மணி நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதே விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications