கொள்ளைக் கும்பலை துப்பாக்கியால் சுட்டுதிருட்டைத் தடுத்த வாட்ச்மேன்
சென்னை:சென்னை அருகே தனியார் நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற கும்பலை, நிறுவன காவலாளிகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.
சென்னை திருவொற்றியூரில் கண்டெய்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில், நேற்று இரவு 10 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க உள்ளே நுழைந்தது.
திருடர்களைப் பார்த்து விட்ட காவலாளிகள் செளகத் அலி, முகம்மது இம்தியாஸ் உள்ளிட்ட 3 பேரும் கொள்ளையர்களை விரட்ட முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் காவலாளிகளைத் தாக்க முயன்றனர்.
இதையடுத்து சௌகத் அலி தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். ஆனால் அதற்குப் பயப்படாத கொள்ளைக் கும்பல், காவலாளிகளைத் தொடர்ந்து தாக்கியது. இதில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட முகம்மது இம்தியாஸ் காயமடைந்தார்.
இதையடுத்து சௌகத் அலி கொள்ளைக் கும்பலை நோக்கி சுட்டார். அதில் கொள்ளையர்களில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
காயமடைந்த காவலாளி இம்தியாஸ் அரசு ஸ்டாண்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மூன்று காவலாளிகளும் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் தைரியமாக கொள்ளையர்களை சுட்டு விரட்டியதால் பெரும் கொள்ளை தடுக்கப்பட்டது.