சு.சுவாமி மனைவியின் ராமர் பால விசிட்!
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் வந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியின் மனைவி, போலீஸாருக்குத் தெரிவிக்காமல் ஒரு படகில் ஏறி ராமர் பாலம் பகுதியைப் பார்வையிடச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. இந்து அமைப்புகளும் இதை எதிர்த்து வருகின்றன. அதேபோல தீவிர பாஜக ஆதரவாளரான ஜனதாக் கட்சித் தலைவர் சுவாமியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந் நிலையில் நேற்று சுவாமியின் மனைவியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான ரக்ஷனா ராமேஸ்வரம் வந்தார். ராமர் பாலத்தைப் பார்க்க வேண்டும் என அவர் கூறவே அதற்கான ஏற்பாடுகளை ஜனதாக் கட்சியினர் செய்தனர்.
ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்கான அனுமதியை வழங்க மறுத்தார்.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ராமர் பாலத்துக்குச் சென்ற ரக்ஷனா முடிவு செய்தார். இதையடுத்து ஒரு படகில் ஏறி தனுஷ்கோடி சென்ற ரக்ஷனா அங்கிருந்து மீன் பிடி படகு மூலம் கடலுக்குள் சென்றார். அவருடன் கட்சியினர் சிலரும் சென்றனர்.
இந்தக் கடல் பயணம் குறித்து காவல்துறைக்கோ அல்லது மீன்வளத்துறைக்கோ சுவாமியின் மனைவி தகவல் தெரிவிக்கவில்லை.
பின்னர் கரை திரும்பிய ரக்ஷனா செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலத்தை நான் நேரில் பார்த்தபோது, அது மனித சக்தியால் கட்டப்பட்டது போலவே தோன்றுகிறது.
நேரில் பார்த்த விவரங்களை நான் சட்ட நிபுணர்களிடம் தெரிவித்து ஆலோசனை செய்யவுள்ளேன். அதன் பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அனுமதி பெறாமல் ராமர் பாலம் உள்ள பகுதிக்கு சுவாமியின் மனைவி சென்றது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
தனி ஈழம் உருவாவது நிச்சயம்: சுவாமி
இந் நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு சிங்கள மக்களுக்குச் சமமான அந்தஸ்தும், அதிகாரமும் கொடுக்கப்படவில்லை என்றால் நிச்சயம் தனி ஈழம் உருவாகும், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், இலங்கையின் ஆளும் கட்சியான சுதந்திராக் கட்சி புதிதாக ஒரு அதிகாரப் பகிர்வு திட்டத்தை முன் வைத்துள்ளது. இந்தத் திட்டம் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
அந்தக் கட்சியின் பிற்போக்கு மனப்பான்மையைப் பிரதிபலிக்கும் விதமாகவே இந்தத் திட்டம் உள்ளது.
தமிழ் மக்களையும், அவர்களது மனித உரிமைகளையும் இழிவுபடுத்தும் வகையில்தான் அதிகாரப் பகிர்வு திட்டத்தில் உள்ள அம்சங்கள் வெளிக்காட்டுகின்றன.
தமிழ் மக்களை அலட்சியப்படுத்தும் போக்கும் தொடருவது கண்டனத்துக்குரியது.
சிங்களர்களுக்கு இணையான அந்தஸ்தும், அதிகாரமும் தமிழர்களுக்கு மறுக்கப்பட்டால், அந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் தனித் தமிழ் ஈழம் மலரும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.