பீடியில் மண்டை ஓடு படம்: மறுபரிசீலனை செய்ய குழு
டெல்லி:பீடிக் கட்டுக்களில் மண்டை ஓட்டுப் படத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற உத்தரவை கைவிட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பீடிக் கட்டுக்களில் மண்டை ஓட்டுப் படத்தைப் பிரசுரிக்க வேண்டும் என அமைச்சர் அன்புமணி தலைமையிலான நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பீடித் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து பீடித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து இந்த உத்தரவை கைவிட வேண்டும் என பிரதமருக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணிக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பீடித் தொழிலாளர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் பீடி அதிபர்களுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
இந் நிலையில் கருணாநிதியின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தொழலாளர் நலத்துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இன்னொருவரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.
இக்குழு தனது அறிக்கையை 20ம் தேதிக்குள் மத்திய அரசிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கருணாநிதியின் கோரிக்கையை ஆந்திர அரசும் ஆதரித்துள்ளது.
மண்டை ஓடு படத்தை நீக்க முடிவு செய்யப்பட்டால், பாமக-திமுக இடையே ஒரு புதிய மோதல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.