சன் டிவி-தினகரன் ஊழியர்கள் சாலை மறியல்
மதுரை:அழகிரியின் ஆதரவாளர்கள் வெறித்தனமாக தாக்கியதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறி மதுரை-சென்னை நெடுஞ்சாலையில், சன் டிவி, தினகரன் ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். போலீஸாருடனும் அவர்கள் கடும் வாக்குவாதம் நடத்தினர்.
மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் இன்று காலை நடத்திய வெறித் தாக்குதலால் நிலைகுலைந்து போன சன் டிவி, தினகரன் ஊழியர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் 3 அப்பாவிகளின் உயிர்கள் பறி போய் விட்டன.
ரெளடித்தனமான தாக்குதலைத் தடுக்க போலீஸார் உடனடியாக வராததால், கொதிப்படைந்த ஊழியர்கள் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரளாக சென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்து மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி. அன்பு, அனைவரையும் கலைந்து போகுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதைக் கேட்காத ஊழியர்கள், அழகிரிதானே உங்களுக்கு முக்கியம், பறிபோன 3 உயிரை உங்களால் தர முடியுமா.
நாங்கள் கலைய மாட்டோம். வேண்டுமானால் தடியடி நடத்திக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாகப் பேசினர்.
நீண்ட நேரம் அவர்களும் போலீஸாரும் கடுமையாக வாக்குவாதம் செய்தபடி இருந்தனர். உயர் அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்திய பின்னரே கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications