ஆள் கடத்தல்: மேலும் ஒரு எம்எல்ஏ சரண்
ஹைதராபாத்:ஆள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ போலீஸாரிடம் சரணடைந்தார்.
டெல்லியிலிருந்து ஆள் மாறாட்டம் மூலம் கனடாவுக்கு ஒரு பெண் மற்றும் பையனுடன் (மனைவி, மகன் என்று கூறி) செல்ல முயன்று கைதானார் பாஜக எம்.பி. பாபுபாய் கட்டாரா.
இதையடுத்து ஆள் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தெலுங்கான ராஷ்டிரிய கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு இந்த விவகாரத்தில் பெரும் தொடர்புகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சமீபத்தில் எம்.பி. நரேந்திராவை தெலுங்கானா கட்சி சஸ்பெண்ட் செய்தது. மேலும் லிங்கய்யா என்ற எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த பாபுராவ் என்ற இன்னொரு தெலுங்கானா எம்.எல்.ஏ ஹைதராபாத் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் சரணடைந்தார்.
இவர் கட்டாரா கைதானவுடன் தலைமறைவானவர். சமீபத்தில், ஆள் கடத்தல் வழக்கில் முக்கியத் தொடர்புடைய புரோக்கர் ரஷீத் என்பவர் ஆந்திர போலீஸாரிடம் சிக்கினார். அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், பாபுராவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.