கருணாநிதியும், 11ம் நம்பரும்!
சென்னை:முதல்வர் கருணாநிதியின் ராசி எண் 11 என்று சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி புள்ளி விவரத்தோடு எடுத்துக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
சட்டசபையில் கருணாநிதி பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சட்டசபையில் இன்று ஆளுநர் பர்னாலா, அனைத்துக் கட்சித் தலைவர்கள் முதல்வரை வாழ்த்திப் பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சித் தலைவர் கோவிந்தசாமி பேசியபோது முதல்வருக்கு ராசியான எண் 11 எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து அவர் பேசுகையில், சிலருக்கு(ஜெயலலிதாவுக்கு) 9 ராசியான எண்ணாக இருக்கலாம் ஆனால் முதல்வருக்கு 11 தான் ராசியான எண்.
11 முறை அவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1957ம் ஆண்டு குளித்தலையில் வெற்றி பெற்றது முதல் 11 சட்டசபைத் தேர்தல்களை அவர் சந்தித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே 11ம் தேதிதான் 5வது முறையாக அவர் முதல்வர் பதவிக்கு மீண்டும் வந்தார். இன்று மே 11. அவரது சட்டசபை பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி கோவிந்தசாமி நிறுத்தியபோது ஆளுங்கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் மேசைகளைப் பலமாகத் தட்டி வரவேற்றனர்.
பின்னர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்தியபோது கோவிந்தசாமியின் பேச்சைக் குறிப்பிட்டுக் கூறுகையில், கோவிந்தசாமி கூறிய 11 மட்டுமல்ல வேறு சில 11களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சட்டசபையில் இன்று 11 கட்சிகளுக்கு உறுப்பினர்கள் உள்ளனர். 1967ம் ஆண்டு தேர்தல் நிதியாக நான் ரூ.11 லட்சத்தை வசூலித்துத் தந்தேன். 1967ம் ஆண்டு, சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அண்ணா அறிவித்தபோது, சைதாப்பேட்டை தொகுதியை நிதி வசூலித்துத் தந்த மிஸ்டர் 11 லட்சத்துக்கு ஒதுக்குவதாக அறிவித்தார் என்று கூறியபோது மீண்டும் மேசைத் தட்டல் சபையை அதிர வைத்தது.