டெல்லியில் தமிழக பெண்கள் மீது தாக்குதல்
டெல்லி:டெல்லியில் நடந்த முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழா பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற தமிழக பெண்கள் மீது மேற்கு வங்க குழுவினர் தாக்குதல் நடத்தியதில் தமிழக குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் காயமடைந்தனர்.
மீரட் நகரில் முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த முதலாவது சுதந்திரப் போராட்டத்தின் 150வது ஆண்டு விழாவையொட்டி டெல்லியில் மத்திய இளைஞர் நல்வாழ்வுத் துறை சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேற்கு வங்கக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், தமிழக குழுவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் கோவையைச் சேர்ந்த இன்பா, வசந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். வசந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக குழுவினர் தங்களது முகாமுக்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து டெல்லி உதவி காவல் ஆணையர் கருணாகரன் வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினார். தமிழக பெண்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழக குழுவினர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்கு திகார் சிறையில் பணியில் உள்ள தமிழக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.