மதுரை வன்முறை: மேயர் கோர்ட்டில் சரண்
மதுரை:மதுரையில் தினகரன் கருத்துக் கணிப்பு தொடர்பாக நடந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கில், மேயர் தேன்மொழி கோபிநாதன் உள்ளிட்ட 3 பேர் மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழைமை மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நகர் முழுவதும் தினகரன் நாளிதழ்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தினகரன், சன் டிவி அலுவலகமும் தாக்கி தீவைக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்ட 3 பேர் இன்று மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பின்னர் அவர்கள் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி ரவீந்திரன் மூன்று பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.