தயாநிதி மாறன் ராஜினாமா? கருணாநிதியை சந்திக்கஅனுமதி மறுப்பு-திடீர் ஊட்டி பயணம்!
சென்னை:முதல்வர் கருணாநிதியை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வீட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் வாசலிலேயே காத்திருந்து கருணாநிதி வந்தவுடன் கடிதம் (ராஜினாமா?) ஒன்றைக் கொடுத்து விட்டு ஊட்டிக்குக் கிளம்பிச் சென்றார்.
மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மாறன் குடும்பம் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தை முற்றிலும் புறக்கணித்தது. சமரசப் பேச்சுக்காக பலமுறை முதல்வர் அழைத்தும் மாறன் சகோதரர்களோ அல்லது அவர்களது குடும்பத்தினரோ வரவில்லை.
மேலும், கருணாநிதிக்கு சட்டசபை மற்றும் தீவுத் திடலில் நடந்த பாராட்டு விழாவையும் மாறன் குடும்பம் புறக்கணித்தது. இதையடுத்து தீவுத் திடல் பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமை சன் டிவிக்கு மறுக்கப்பட்டது. மாறாக ராஜ் டிவிக்கு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்திக்க தயாநிதி மாறன் முயன்றார். ஆனால் கருணாநிதி சந்திக்க மறுத்து விட்டார். இதையடுத்து சிஐடி நகரில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு தயாநிதி மாறன் நேற்று சென்றார்.
ஆனால் அவருக்கு வீட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அமைச்சர் என்ற முறையில் சந்திப்பதாக இருந்தால் கோட்டைக்குச் செல்லவும், திமுகவைச் சேர்ந்தவர் என்ற முறையில் சந்திக்க விரும்பினால் அறிவாலயம் செல்லவும், உறவினர் என்ற முறையில் சந்திக்க அனுமதி கிடையாது என கருணாநிதி வீட்டில் கூறப்பட்டது.
இதையடுத்து வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் தயாநிதி மாறன். பின்னர் கருணாநிதி வெளியே வந்தார். அப்போது அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார் தயாநிதி மாறன். அந்தக் கடிதத்தில் தான் ராஜினாமா செய்வதாக அவர் எழுதியிருந்தார்.
கடிதத்தை வாங்க மறுத்த கருணாநிதி இதை பிரதமரிடம் போய் கொடு என்று கூறி விட்டுப் போய் விட்டார்.
பின்னர் விமான நிலையம் சென்ற தயாநிதி மாறன் அங்கிருந்து கோவைக்குச் சென்றார். பின்னர் ஊட்டிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தயாநிதி மாறன் கோவைக்கு வந்தபோது அவரை வரவேற்க திமுகவினர் யாரும் வரவில்லை. அதேசமயம், மத்திய அமைச்சர் என்ற மரியாதைக்காக அரசு சார்பில் வட்டாட்சியர் வந்திருந்தார்.
அரசு சார்பில் இரு கார்களும் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கார்களை நிராகரித்து விட்ட தயாநிதி மாறன் வேறு காரில் ஊட்டிக்குக் கிளம்பிச் சென்றார்.
தயாநிதி மாறனின் குடும்பத்தினர் ஏற்கனவே ஊட்டியில்தான் உள்ளனர். இந்த நிலையில் கலாநிதி மாறனும் இன்று ஊட்டி செல்வதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து மாறன் குடும்பத்தினர் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஊட்டியில் உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சான்ரிமோ கெஸ்ட் ஹவுஸில்தான் மாறன் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். அங்கு பத்திரிக்கையாளர்கள் அதிக அளவில் நேற்று குவிந்தனர். ஆனால் மாறன் குடும்பத்திலிருந்து இப்போதைக்கு யாரும் சந்திப்பதாக இல்லை. ஓரிரு நாளில் பத்திரிக்கையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.