கலங்கரை விளக்கமும் போகஸ் லைட்டும்
சென்னை:சட்டசபையில் ஆளும் கட்சியிலிருந்து வரும் சைகைகளை மட்டுமே முடிவாக அறிவிக்கிறார் என சபாநாயகர் ஆவுடையப்பன் மீது எதிர்கட்சி துணைத்தலைவர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
சபாநாயகர் ஆவுடையப்பன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று சட்டசபையில் பன்னீர்செல்வம் பேசுகையில், சபாநாயகர் ஆவுடையப்பன் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து வருகிறார். உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கூட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது வெளியேற்றப்படுவதில்லை. உறுப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கையில் விதி 22ன் கீழ் அவையை ஒத்திவைக்காமல் எதிர்க்கட்சியினரை வெளியேற்றுகிறார். உறுப்பினர்களை மரியாகை குறைவாக நடத்துகிறார். கைவிரல் காட்டி எச்சரிக்கை செய்கிறார்.
சபாநாயகர் அவை நடத்துவதற்கான அதிகாரத்தை அவையிலிருந்துதான் பெறுகிறார். இந்த பேரவையில் அவரும் ஒரு வேலையாள் தானே தவிர எஜமானர் அல்ல என்றார்.
இதை அவை குறிப்பிலிருந்து நீக்க துணை சபாநாயகர் துரைசாமி உத்தரவிட்டார்.
அப்போது இடைமறித்த முதல்வர் கருணாநிதி, நீக்க வேண்டாம், எதிர்காலத்தில் எந்த கட்சியினர் என்ன பேசினார்கள் என மக்களுக்குத் தெரியட்டும் என்றார்.
மறுபடியும் பன்னீர்செல்வம் பேசும்போது, சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். அவையில் அதிமுகவினர் தந்த ஒத்திவைப்பு தீர்மானங்களை அவர் இதுவரை அனுமதிக்கவில்லை. அதை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக் கொள்கிறார். அது என்ன தீர்மானம் என தெரியவில்லை என்றார்.
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், 1971லிருந்து இந்த அவையில் இருக்கும் எனக்கு ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் கடந்த ஆட்சியிலிருந்துதான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் என்பதே அறிமுகம் செய்யப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய பன்னீர், நான் தீர்மானத்தை பற்றிகேட்டால் திப்பு சுல்தான், ஹைதர் அலி என பழங்கால கதையை பேசுகிறார் என பன்னீர்செல்வம் கூறினார்.
அப்போது அவை முன்னவர் அன்பழகன் தலையிட்டு, ஹைதர் அலி காலத்தில் சட்டசபை இல்லை, கடந்த காலங்களில் சட்டசபையில் பின்பற்றப்பட்ட மரபுகள் இப்போதும் தொடருகின்றன என்றார்.
மீண்டும் பன்னீர்செல்வம் பேசுகையில், தனித்தீர்மானம் என்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஆய்வுக்குழு முடிவு ஒன்றும், சபையில் நடப்பது ஒன்றுமாக இருக்கிறது. இதற்கு சபாநாயகர்தான் பொறுப்பு. சபாநாயகர் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் டாஸ்மாக் பார் ஒதுக்க எழுதியிருப்பது குற்றமா, இல்லையா என்றார்.
இதற்கு பதிலடி தந்த அமைச்சர் பரிதிஇளம்வழுதி, அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்க வேண்டாம், சரக்கை அவிழ்த்து விடுங்கள், இல்லை என்றால் சலாம் போட்டுவிட்டு ஓடுங்கள் என்றார்.
அப்போது பேசிய முதல்வர் கருணாநிதி, சபாநாயகர் பரிந்துரை கடிதம் கொடுத்ததை தவறு என்று கூறினால், முன்னாள் சபாநாயகர் கைப்பட கடிதம் கொடுத்து நடந்த ஊழல்களை இந்த சபையில் கூற தயாராக உள்ளேன். இப்போது அந்த வம்புக்குப் போக வேண்டாம் என்றார்.
அைமச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கடிதம் கொடுத்தார், ஆனால் அதன்படி கடை கொடுத்திருந்தால் மட்டும் தான் குற்றம். அந்த பரிந்துரை அமலாக்கப்படவில்லை என்பதிலிருந்து இந்த அரசு நேர்மையானது என்பதை அறிந்துக் கொள்ளலாம் என்றார்.
இதற்கு பன்னீர்செல்வம் எழுந்து, சபாநாயகர் ஆளும்கட்சி பக்கத்திலிருந்து வரும் சைகைகளை மட்டுமே முடிவாக அறிவிக்கிறார். காது கேளாதவர்களுக்கு சைகை மூலம் கூறுவது போல் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி கைகாட்டுகிறார் என்றார்.
இதற்கு பதில் தந்த ஆற்காடு வீராச்சாமி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து தான் முதல்வரின் கண்களையே பார்த்து கொண்டிருப்பார், அதுபோல் இப்போதைய சபாநாயகர் யார் கண்களையும் பார்ப்பதில்லை, யாரும் கண் அசைப்பதில்லை என்றார்.
கண்ணின் உள்ளே கருமணியை தான் அமைச்சர் அசைக்கிறார் என தொடர்ந்து பேச முயன்ற பன்னீர்செல்வத்தை இடைமறித்து பேசிய பரிதிஇளம்வழுதி,
கலங்கரை விளக்கம் போல் சபையில் என்ன நடக்கிறது என 4 பக்கமும் சபாநாயகர் பார்க்க வேண்டும். ஆனால் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து போகஸ் லைட் போல் முதல்வரின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பார் என்றார்.