தண்ணியடித்தால் கட்சியை விட்டு நீக்கம்-ராமதாஸ்
சென்னை: பாமகவை சேர்ந்த எவரும் மது குடிக்க கூடாது,குடிப் பழக்கம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் மணி தலைமையிலும் நடந்தது.
இக் கூட்டத்தில் கட்சியினருக்காக சில கட்டளைகளை அறிவித்து அதை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் ராமதாஸ்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பொது மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்களில் உரிய அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டுமே தவிர, எந்த சூழ்நிலையிலும் சாலை மறியலில் ஈடுபடுதல், உருவ பொம்மைகள் எரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
பாமக பற்றியோ, தலைவர்களை பற்றியோ உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டால், அதை ஜனநாயகரீதியாக, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் எதிர்கொள்ள வேண்டுமே தவிர பத்திரிக்கைகளை கொளுத்தும் செயலில் ஈடுப்படக் கூடாது.
பாமகவை சேர்ந்த எவரும் மது குடிக்க கூடாது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் நடைபெறவுள்ள உட்கட்சித் தேர்தலில் எந்த பொறுப்புகளுக்கும் வர அனுமதிக்கப்பட மாட்டாது. குடிப்பழக்கம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.