ஆர்ப்பரிக்கும் கடல் - வீடுகளுக்குள் புகும் நீர்பீதியில் குமரி, நாகை, ராமநாதபுரம் மக்கள்
சென்னை:கடல் கொந்தளிப்பு தொடர்வதாலும், கடலில் ராட்சத அலைகள் எழுவதாலும், கடல் நீர் தொடர்ந்து வீடுகளுக்குள் புகுந்தவண்ணம் உள்ளதாலும் கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகை மாவட்ட கடலோர பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் வழக்கமாக கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம். இந்த சமயத்தில் கடலில் பெரிய பெரிய அலைகளும் எழும்.
ஆனால் சுனாமி தாக்குதலுக்குப் பிறகு இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடந்து வருவதால் கடலோர தமிழக மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக குமரி மாவட்ட கடலோர மக்களை கடல் கொந்தளிப்புகள் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன.
ராஜக்காமங்கலம்துறை, மேல மணக்குடி, கீழ மணக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் பெரும் கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து வந்து, ஊருக்குள் புகுவதால் கடல் நீர் வீடுகளுக்குள் புகுகிறது.
கடல் நீர் உட்புகுந்து வருவதால் பல வீடுகள் இடிந்துள்ளன. இதனால் பீதியடைந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி, கீழக்கரை அருகே உள்ள வேலாயுதபுரம், தோப்புவலசை, ஆஞ்சநேயபுரம், பெரியபட்டனம் உள்ளிட்ட இடங்களிலும் கடல் நீர் ஊருக்குள் புகுந்து மக்களை பயமுறுத்தியது.
கரையிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் ஊருக்குள் கடல் நீர் வந்ததால் மக்கள் பீதியடைந்தனர். சுனாமி வருமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை உள்ளே வராமல் தடுக்கும் முயற்சியில் ஊர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல நாகை மாவட்டம் கோடியக்கரையிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்ததால் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தொடர்ந்து கடல் கொந்தளிப்பு நிலவுவதால் இந்த மூன்று மாவட்ட மீனவர்களும் கடலில் மீன் பிடிக்க போகமல் உள்ளனர்.