கடத்தப்பட்ட 12 மீனவர்களும் விடுதலை;2 பிரிவாக ராமேஸ்வரம் வந்தனர்
சென்னைவிடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 12 மீனவர்களும் நேற்று இரவு திடீரென ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். அவர்களை யார் விடுவித்தது என்று தெரியவில்லை.
கடந்த மார்ச் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ததேயூஸ், ஜேசுதாசன், கிங்ஸ்லி, ததேயூஸ், ஆல்பர்ட், கிளமன்ட், தீபக், அனிஸ்டன், ஜேம்ஸ், பிரபு, பிராங்க்ளின், கேரளாவைச் சேர்ந்த சைமன் ஆகிய 12 பேரும் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
ஆனால் குறித்த நேரத்தில் கரைக்கு அவர்கள் திரும்பவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கடலோரக் காவல் படையிடம் சிக்கிய 6 கடல் புலிகளிடம் நடத்திய விசாரணையில் 12 பேரும் விடுதலைப் புலிகள் வசம் இருப்பதாக தெரிய வந்தது.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தாங்கள் தமிழக மீனவர்களைக் கடத்தவில்லை என்று விடுதலைப் புலிகள் மறுத்தனர். இந்த நிலையில், 12 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. பிரதமருக்கு கடிதமும் எழுதியது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு திடீரென 12 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சைமன், கடத்தப்பட்ட படகிலேயே தனியாக அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 11 பேரும் இரண்டு படகுகளில் தனித் தனியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதில், ததேயூஸ், ஆல்பர்ட், கிங்ஸ்லி, ஜேசுதாசன், ஜோசப் ததேயூஸ் ஆகிய 5 பேரும் நேற்று மாலை 6 மணிக்கு ராமேஸ்வரம் அருகே உள்ள பிசாசுமுனை என்ற கடற் பகுதியில் படகில் வந்து இறங்கினர்.
இரவு ஒன்பதே கால் மணியளவில் மற்ற 6 பேரும் தங்கச்சி மடம் அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திருஞானம் உத்தரவின் பேரில் போலீஸார் விரைந்து சென்று 11 பேரையும் அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் சென்றனர்.
ஆனால் வழியிலேயே எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள், மீனவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது 11 பேரையும் இரு பிரிவாகப் பிரித்து தனித் தனி படகுகளில் விடுதலைப் புலிகள்தான் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
12 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதை டிஜிபி முகர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார். அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னரே என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, தனியாக படகில் அனுப்பப்பட்ட சைமன் இன்னும் கேரளா போய்ச் சேரவில்லை என்று தெரிகிறது. அவர் மாலத்தீவு வழியாக போனபோது அந்நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையால் பிடிக்கப்பட்டிருக்கலாம் என டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
புலிகளால் கடத்தப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டதால் பெரும் பீதி நீங்கியுள்ளது. இருப்பினும் அவர்களை யார் கடத்தி வைத்ததிருந்து என்பது இன்னும் தெளிவாக தெரிய வராததால் அதுதொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.