மும்பை குண்டுவெடிப்பு-5 பேருக்கு 3 ஆண்டு சிறை
மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பில், 5 பேருக்கு தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை தடா நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேரை குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இவர்களுக்கான தண்டனை விவரம் நேற்று முதல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி 100 பேரும் (சஞ்சய் தத் தவிர) நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் அப்பாஸ், இப்ராகிம், யஷ்வந்த் பாயின்கர், ரஷீத் ஆல்வார், ஷரீப் ஆதிகர் 5 மீனவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
இவர்கள் ஐந்து பேரும் டைகர் மேமன் கும்பலுக்கு படகுகள் மூலம் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களை கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் ஐந்து பேருக்கும் தலா 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications