மதுரை அரசு டாக்டர்கள் ஸ்டிரைக் வாபஸ்
மதுரை:மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு நரிமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொண்டையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சிறுவன் இறந்து போனான்.
இதனால் கொதிப்படைந்த சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் சிவகுருநாதன், மயக்க மருந்து கொடுத்த அவரது மனைவி டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை டாக்டர்கள் கோபமடைந்து போராட்டத்தில் குதித்தனர். உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில் டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மதுரையில் கடந்த 18ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு டாக்டர்கள் குதித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாளை மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளும் போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டிருந்தன.
இதையடுத்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
மேலும், மதுரை கலெக்டர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரும் டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் நிர்வாகிகளின் சில கோரிக்கைகைள் ஏற்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டாக்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இன்று மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படுகிறது.