மர்ம திரவத்துடன் வந்த விமான பயணி கைது
சென்னை:சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணி மறைத்து வைத்திருந்த சிரிஞ்சுகளில் மர்ம திரவம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது போதைப் பொருளாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக இன்று காலை பயணிகள் காத்திருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த ஷேக் காதர் என்ற பயணியின் உடமைகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், ஏராளமான சிரிஞ்சுகள், ஒரு பாட்டிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த சிரிஞ்சுகளில் மர்ம திரவம் நிரப்பப்பட்டிருந்தது.
அந்தத் திரவம் போதைப் பொருளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், ஷேக் காதரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீஸார் கைது செய்தனர்.