விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு பெரிதாக சிக்கவில்லை
சென்னைமுன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடுகளில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து, மின்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை வகித்தவர் விஸ்வநாதன். இவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளில் சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் சோதனை நடந்தது. சென்னை, திண்டுக்கல்லில் உள்ள விஸ்வநாதனின் வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.
நத்தம் அருகே வேம்பார்பட்டி கிராமத்தில் உள்ள விஸ்வநாதனின் வீடு, பூர்வீக ஊரான உலுப்பக்குடியில் உள்ள விஸ்வநாதனின் தம்பி ஜெயராஜ் வீடு, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள விஸ்வநாதனின் நண்பர் ஜனகரின் வீடு, உலுப்பக்குடியில் உள்ள விஸ்வநாதனின் தந்தை வசிக்கும் வீடு,
திண்டுக்கல்லில் உள்ள விஸ்வநாதனின் அண்ணன் மேகநாதனின் வீடு, சென்னையில் உள்ள விஸ்வநவாதனின் மகன் அமர்நாத் வசிக்கும் அபார்ட்மென்ட், சென்னை தி.நகரில் உள்ள விஸ்வநாதனின் மகனுக்குச் சொந்தமான அப்போலா கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம், வட பழனி பஸ் நிலையம் அருகே உள்ள அப்போலோ கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளில் பெரிதாக எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது. எந்தவித ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications