பெண்களை குளிக்க விடாமல் தடுத்தததாகவைகுண்டராஜன் மீது புது வழக்கு
மதுரை:கடலில் குளிக்க விடாமல் பெண்களைத் தடுத்ததாகவும், கொலை முயற்சிக்குத் தூண்டியதாகவும், ஜெயா டிவி பங்குதாரரும், தொழிலதிபருமான வைகுண்டராஜன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்ஜாமீன் வழங்கியது.
நெல்லை மாவட்டம் கீரைக்காரன் தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவர்தான் ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரர் என சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இதன் காரணமாக, திமுக அரசு வைகுண்டராஜனை மிரட்டி ஜெயா டிவி பங்குகளை வாங்கி, டிவியை முடக்க நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
சமீபத்தில் வைகுண்டராஜனின் தாது மணல் பிரித்தெடுக்கும் நிறுவனங்களில் கனிம வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் வைகுண்டராஜன் மீது புதிதாக ஒரு வழக்கு நெல்லை மாவட்டம் கருங்கல் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த 18ம் தேதி சிலோன் மணி, எடிசம்மாள், வல்சம்மாள், சுசிந்தா ஆகிய பெண்கள் கருங்கல் பகுதி கடற்கரையில், கடலில் குளிக்கச் சென்றனர்.
அப்போது வைகுண்டராஜனுக்குச் சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களை குளிக்க விடாமல் தடுத்து, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம். இதுதொடர்பாக வந்த புகாரைத் தொடர்ந்து கருங்கல் போலீஸார், வைகுண்டராஜன் மீது பெண்களைக் குளிக்க விடாமல் தடுத்ததாகவும், கொலை முயற்சிக்குத் தூண்டியதாகவும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து வைகுண்டராஜன் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், என் மீது போலீஸார் பொய்யான வழக்கைப் போட்டு கைது செய்யத் துடிக்கின்றனர்.
நான் வருமான வரி கட்டுபவன். கைது செய்யப்பட்டால் எனது கெளரவம் பாதிக்கப்படும். சட்டத்தை மீறி எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை நீதிபதி வீரராகவன் விசாரித்தார். பின்னர் வைகுண்டராஜனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி, சென்னையில் தங்கியிருக்க வேண்டும், எழும்பூர் காவல் நிலையத்தில் தினசரி காலை, மதியம், மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications