ராமர் பாலம்: 15 நாள் டைம் -பூரி மிரட்டல்!
மதுரை:ராமர் பாலத்தை இடிப்பதை 15 நாட்களுக்குள் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள சங்கராச்சாரியார்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என பூரி சங்கராச்சாரியார் நிஷானந்தா சரஸ்வதி சுவாமிகள் எச்சரித்துள்ளார்.
மதுரை வந்த பூரி சங்கராச்சாரியார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராமரும், அனுமனும் சேர்ந்து கட்டியதுதான் ராமர் பாலம். இது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம்தான். அது இயற்கையாக அமைந்த மணல் திட்டு அல்ல.
அந்தப் பாலத்தை இடிக்க முயன்றால் அங்கிருந்து விஷ வாயு கிளம்பி மக்களை பாதிக்கும். இது நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல.
ராமர் பாலம் கிட்டத்தட்ட 17.5 லட்சம் ஆண்டு பழமை வாய்ந்தது என்று நாசா நிறுவனத்தின் முன்னாள் உதவி இயக்குநரான சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதைப் புறக்கணிக்கக் கூடாது.
இந்த பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிடம் கோரியுள்ளோம். இந்த நிலையில் பாலத்தை இடிக்க முயல்வது கண்டனத்துக்குரியது.
15 நாள் வரை அவகாசம் தருகிறோம். அதற்குள் பாலத்தை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள சங்காராச்சாரியர்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் பூரி சங்கராச்சாரியார்.