ஓடும் ரயிலில் கீ கீ, கூ கூ;கிளி-குருவி கடத்திய 4 பேர் கைது!
ஈரோடு:நூற்றுக்கணக்கான கிளிகள், குருவிகளை கூடைகளில் அடைத்து வைத்து கடத்திச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்து, குருவிகள், கிளிகளைப் பறிமுதல் செய்தனர்.
திருச்சியிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸார் வழக்கமான ரோந்து சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, கிளி, குருவிகளின் சப்தம் கேட்டு குழம்பினர். ஓடும் ரயிலில் பறவைகள் கத்துகின்றனவே என்று யோசித்த அவர்கள் சென்று பார்த்தபோது, ஒரு பெடச்டியில், 10க்கும் அதிகமான கூண்டுகளில் 300 கிளிகளும், 300 சிட்டுக்குருவிகளும் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அந்தக் கூடைகளுடன் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரித்தபோது, கரூர், கொடுமுடி, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து இவற்றைப் பிடித்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இவற்றை 1 மாதம் வளர்த்து அதை கேரளாவிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது இவர்களின் தொழிலாம்.
இதுகுறித்து ஈரோடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, ஈரோடு ரயில்வே நிலையம் வந்ததும் நால்வரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கிளி, குருவிகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிடிபட்ட கிளி, குருவிகளை காட்டுக்குள் கொண்டு போய் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.