ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் மைத்ரேயன், இளவரசன்
சென்னைராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் டாக்டர் வி. மைத்ரேயன், ஆ. இளவரசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் மைத்ரேயன், பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் வக்கீல் ஆ.இளவரசன் ஆகியோர் போட்டியிடுவர் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் மைத்ரேயன் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். புற்றுநோய் மருத்துவ நிபுணரான மைத்ரேயன், ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தார். அங்கு சரியான முறையில் கண்டுகொள்ளப்படாததால், அதிமுகவில் இணைந்தார்.
2001ம் ஆண்டு மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் 2002ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 2004 வரை அப்பதவியில் இருந்தார்.
பின்னர் 2004 முதல் 2006 வரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக இருந்தார்.
ஆ. இளவரசன் வக்கீல் ஆவார். பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான இளவரசன், 1989ம் ஆண்டு ஜெ. அணி சார்பில் ஆண்டிமடம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் படிப்படியாக கட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்று இப்போது எம்.பி பதவிக்கு உயர்ந்துள்ளார்.