சென்னை திரும்பினார் ஜெயலலிதா:ராஜ்யசபா தேர்தல் குறித்து திருப்தி
சென்னை:கொடநாடு தோட்டத்தில் ஓய்வெடுத்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை திரும்பினார். ராஜ்யசபா தேர்தல் நியாயமாக நடைபெறவுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் திருப்தி தெரிவித்தார்.
ஊட்டி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் ராஜ்யசபா தேர்தல் நெருங்குவதாலும், மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், அவர் ஊட்டியிலிருந்து சென்னை திரும்பினார்.
நேற்று காலை 11 மணிக்கு நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலிலதாவைச் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜெயலலிதா அங்கிருந்து கோவைக்குக் கிளம்பினார்.
கோவை வரும் வழியெங்கும் அதிமுகவினர் திரளாக கூடி நின்று வரவேற்பு அளித்தனர். பின்னர் கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் காரில் இருந்தபடியே ஜெயலலிதா பேசினார். அவரிடம் ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரம் நடக்கக் கூடாது, திமுக கூட்டணி 4 இடங்களில் மட்டுமே போட்டியிடும், அதிமுக 2 இடங்களில் வெல்லட்டும் என முதல்வர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,
இதுதான் நியாயமான தேர்தல், இப்படித்தான் நடக்க வேண்டும். முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது என்றார்.
கனிமொழி குறித்த கேள்விக்கு, இதற்கு பிறகு பதில் சொல்கிறேன் என்றார் ஜெயலலிதா.