வெள்ளை ரவியின் காதலி துணை நடிகை கைது-முக்கிய கூட்டாளியும் கைது
சென்னை:போலீஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் தாதா வெள்ளை ரவியின் முக்கிய கூட்டாளியான சபீர் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வட சென்னையின் பிரபல தாதா வெள்ளை ரவி. இவன் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என ஏராளமான வழக்குகள் உள்ளன.
சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வெள்ளை ரவி தற்போது மீண்டும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளான். சமீபத்தில் ராஜ்குமார் என்ற தொழிலதிபரைக் கடத்தி ரூ. 60 லட்சம் பணத்தைப் பறித்தான் ரவி.
ரவி கும்பலிடமிருந்து தப்பி வந்த ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரவியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரவியை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரவியைப் பிடிக்க பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரவியின் கூட்டாளிகள் வரிசையாக சிக்கி வருகின்றனர். இந்த நிலையில், சபீர் என்ற முக்கிய கூட்டாளியை போலீஸார் பிடித்துள்ளனர்.
பெரியமேடு பகுதியைச் சேர்ந்தவர் சபீர். ராஜ்குமாரைக் கடத்திச் சென்று இவரது கட்டடத்தில்தான் ரவியும், அவனது கூட்டாளிகளும் அடைத்து வைத்திருந்தனர்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு தனது கட்டடத்தில் வைத்திருப்பது தெரிந்தும் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் சபீர். இதையடுத்து போலீஸார் சபீரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் வெள்ளை ரவிக்கு செங்குனறத்தில் கள்ளக் காதலி இருப்பது தெரியவந்தது. அவர் பெயர் சானியா (24) என்றும், அவர் ஒரு துணை நடிகை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் சானியாவின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வீட்டில் ஏராளமான மது பாட்டிகள் இருந்தன. மேலும் சில பயங்கர ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து சானியாவை போலீஸார் கைது செய்யதனர்.
மேலும் சானியா வீட்டில் இருந்த சபி (32), யூனிஸ்கான் (34), ராஜ்குமார் (24) ஆகியோர் இருந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் ராஜ்குமார் என்பவன் வெள்ளை ரவியின் அக்கா மகன் ஆவார்.
வெள்ளை ரவியின் கள்ளக் காதலி என்பதால் அவனின் அனைத்து செயல்பாடுகளும் சானியாவுக்கு தெரியும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து போலீஸார் சானியாவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
வெள்ளை ரவி தற்போது ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவனைப் பிடிக்க போலீஸ் தனிப்படைகள் ஆந்திராவில் முகாமிட்டுள்ளன. விரைவில் ரவி பிடிபடுவான் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications