ஜெயலலிதாவுடன் வாஜ்பாய் பேச்சு:ஷெகாவத்துக்கு ஆதரவு கேட்டார்
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆதரவு கேட்டார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படவுள்ள பைரான் சிங் ஷெகாவத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினார்.
அதற்கு ஜெயலலிதா, அதிமுக தற்போது தனி அணியில் உள்ளது. இந்த அணியில் தெலுங்குதேசம், சமாஜ்வாடி கட்சி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்களிடம் கேட்காமல் தன்னிச்சையாக எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாது.
இந்தக் கட்சிகளின் தலைவரக்ளுடன் ஆலோசிக்க வேண்டும், எனது கட்சித் தலைவர்களுடனும் ஆலோசிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா. இதையடுத்து சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொள்வதாக வாஜ்பாய் கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விவாதிக்க ஹைதராபாத்தில் 3வது அணி தலைவர்கள் கலந்து கொள்கிற ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதாவும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
ஷெகாவத்தை கைவிட்ட ஜோதிபாசு:
அதே போல இன்று கொல்கத்தா சென்ற துணை ஜனாதிபதி ஷெகாவத், மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜோதிபாசுவை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு நேரில் ஆதரவு கோரினார்.
ஆனால், காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரைத் தான் ஆதரிக்கப் போவதாக அவரிடம் ஜோதிபாசு கூறிவிட்டார்.












Click it and Unblock the Notifications