தூங்கும் பாஸ்போர்ட் அலுவலகங்கள்:ஆமை வேகத்தில் தத்கல் திட்டம்
டெல்லி:தத்கல் திட்டத்தில் கூடுதல் கட்டணம் செலுத்தியும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு குறித்த காலத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவிலுள்ள 8 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் தத்கல் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பதவர்களிடமிருந்து ரூ.8.72 கோடி கூடுதல் தொகையாக வசூலித்தும் உரிய காலத்தில் பாஸ்போர்ட் வழங்கவில்லை.
இந்த அலுவலகங்களின் இத்தகைய செயலால் தத்கல் திட்டத்தின் நோக்கமே சிதைந்துவிட்டது. பாஸ்போர்ட் அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து முழு பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாஸ்போர்ட் விதிகளின்படி விண்ணப்பித்த 35 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படவேண்டும். இதில 21 நாட்கள் காவல்துறை விசாரணை அறிக்கைக்கே எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தத்கல் திட்டத்தின் கீழ் 15 நாட்களில் பாஸ்போர்ட் வழங்க கூடுதலாக ரூ.1,000 பெறப்படுகிறது. 10 நாட்களுக்குள் பாஸ்போர்ட் பெற ரூ.1,500 கட்டணம் பெறப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை இணைக்கவில்லை என்ற வெளியுறவு அமைச்சகம் தந்துள்ள உப்பு சப்பில்லாத பதிலை தணிக்கை அதிகாரிகள் ஏற்கவில்லை. விண்ணப்பங்கள் பெறும்போதே ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். விண்ணப்பதாரர்களை குறை சொல்லக் கூடாது.
இந்திய அளவில் லக்னெள பாஸ்போர்ட் அலுவலகத்தின் செயல்பாடு தான் மிக மிக மோசமாக உள்ளது. இங்கு விண்ணப்பித்தவர்கள் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே குறித்த காலத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் 76,000 விண்ணப்பங்கள் காவல்துறை விசாரணை அறிக்கைகாக காத்துக் கிடக்கின்றன.
நாடு முழுவதும் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை காலத்தில் 62 லட்சம் பேர் பல்வேறு பாஸ்போர்ட் மண்டலங்களில் விண்ணப்பித்துள்ளனர். இதில் 19 சதவீதம் பேருக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
சண்டீகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்த 6.8 லட்சம் பேரில் ஒரு பாஸ்போர்ட் கூட குறித்த கால கட்டத்தில் வழங்கப்படவில்லை. இதே போல் புனேயில் 1 சதவீதமும், டெல்லி மற்றும் ஜம்முகாஷ்மீர் அலுவலகத்தில் 8 சதவீதம் பேருக்கும், நாகபுரியில் 58 சதவீதமும், போபாலில் 29 சதவீதம் பேருக்கும் குறித்த காலத்தில் பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என தணிக்கை அதிகாரிகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications