சர்க்கரை வியாதியஸ்தர்களுக்காக திருமண இணையதளம்
டெல்லி:சர்க்கரை வியாதியுடன் உள்ளவர்களின் திருமணத் தேவைக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
www.diabeticmatrimony.comஎன்ற இந்த இணைய தளத்தில் சர்க்கரை வியாதியுடன் உள்ள மணமக்களின் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அவர்கள் குறித்த தகவல்கள் மட்டுமே இதில் இடம் பெற்றிருக்கும் என்பதுதான் இந்த இணையதளத்தின் விசேஷ அம்சம்.
சர்க்கரை வியாதியுடன் உள்ள பலருக்கு திருமணம் ஆவதில் பல சிரமங்கள் உள்ளன. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
சர்க்கரை வியாதியுடன் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் குறித்த முழுமையான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
மேலும் சர்க்கரை வியாதி குறித்த உண்மைத் தகவல்கள், சர்க்கரை வியாதியை எப்படி எதிர்கொள்வது, சர்க்கரை நோய்க்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்த தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
சர்க்கரை வியாதியுடன் இருந்தபோதிலும் அதையும் தாண்டி பல்வேறு சாதனைகள் புரிந்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், 1999ம் ஆண்டு மிஸ் அமெரிக்காவாக தேர்வு செய்யப்பட்டவரும், சர்வதேச அளவில் சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளவருமான நிக்கோல் ஜான்சன், டிவி தொகுப்பாளர் கெளரவ் கபூர் ஆகியோரும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில் கலைஞானி கமல்ஹாசனும் இருப்பதாக இந்த இணையதளம் தெரிவித்துள்ளது.
டெல்லி சர்க்கரை வியாதி ஆய்வு மையம் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளது. இணைய தள தொடக்க நிகழ்ச்சியில், நிக்கோல் ஜான்சன், கெளரவ் கபூர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
நிக்கோல் பேசுகையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு டைப்1 சர்க்கரை வியாதி கண்டறியப்பட்டது. ஆனால் தனது அயராத உழைப்பாலும், மன திடத்தாலும், அதிலிருந்து மீண்டு விட்டேன்.
சர்க்கரை வியாதியுடன்தான் நான் எனது லட்சியங்களை அடைந்தேன். அழகியாக தேர்வு பெற்றேன். கல்யாணம் செய்து கொண்டேன், ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கும் தாயானேன்.
சர்க்கரை வியாதி வந்து விட்டால் யாரும் பயப்படக் கூடாது. மாறாக மனோதிடத்துடன் செயல்பட வேண்டும். சர்க்கரை வியாதி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம் என்றார் நிக்கோல்.
உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை வியாதிக்காரர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 4.6 கோடி பேர் இந்தியாவில் சர்க்கரை வியாதியுடன் உள்ளனர். இந்த எண்ணிக்கை 2030ல் 8 கோடியாக அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications