நாளை கருணாநிதியின் 84வது பிறந்த நாள்
சென்னை: நாளை (ஜூன் 3) முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை அண்ணா நினைவிடத்திற்கும், பெரியார் நினைவிடத்திற்கும் சென்று முதல்வர் கருணாநிதி மலர் வளையம் வைத்து வணங்குகிறார்.
பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
இதைத் தொடர்ந்து அண்ணா மேம்பாலம் அருகே மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
9 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தொண்டர்களை சந்திக்கிறார்.
மாலையில் சிஐடி காலனி வீட்டில் பிரமுகர்களையும், தொண்டர்களையும் சந்திக்கிறார்.
இரவு 7 மணிக்கு தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் வேளச்சேரி சாலை சின்னமலையில் கருணாநிதியின் 84வது பிறந்தநாள் விழா நடைபெறவுள்ளது.
இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தமிழகம் முழுவதும் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டப்படவுள்ளது.
பிறந்த நாளையொட்டி நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் திமுக தலைவர்கள் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
லேசர் தொழில்நுட்பத்தில் பல தலைவர்களின் உருவங்கள் முதல்வருக்கு வாழ்த்து கூறுவது போன்ற காட்சிகள் இதில் இடம் பெற்றன.
முதலில் லேசர் ஒளியில் தமிழ்த்தாய் உருவம் கொண்ட பெண் தோன்றி நிகழ்ச்சிக்கு வரவேற்பு கூறினார். பின்னர் பாரதியார், பாரதிதாசன், கண்ணகி, பெரியார், அண்ணா ஆகியோர் லேசர் உருவில் வந்து பிறந்த நாள் கொண்டாடும் முதல்வரை வாழ்த்தும் காட்சிகள் இடம் பெற்றன. திமுகவின் உதயசூரியன் சின்னமும் லேசரில் ஒளிர்ந்தது.
மேலும் பல நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இசை-நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இறுதியில் வள்ளுவர் உருவம் லேசர் ஒளியில் தோன்றி நன்றி கூறியது.
இந் நிலையில் இன்று திமுக மகளிர் அணி சார்பில் ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள சிறுமலர் காது கேளாதவர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு விஜயா தாயன்பன் தலைமை தாங்கினார். திமுக துணை பொதுச் யலாளர் சற்குணபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல்வரின் மகளும், கவிஞருமான கனிமொழி கலந்துக் கொண்டு சிறுவர்களுக்கு உணவு, இனிப்பு வழங்கினார்.
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு 3 லட்சம் மரக் கன்றுகளை நட நெடுஞ்சாலைதுறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை செயலர் அலாவுதீன் வெளியிட்டுள்ள செய்தியில்,
முதல்வர் கருணாநிதி பிறந்த நாளன்று, தமிழகத்திலுள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும், மாவட்ட முக்கிய சாலைகளிலும் முதல்கட்டமாக 3 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னையில் இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து பல மாவட்டங்களில் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில அமைச்சர்களும், 6 மற்றும் 7ம் தேதிகளில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடுவர். இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்துவர் என்று குறிப்பிட்டுள்ளார்.