ராஜஸ்தானில் பயங்கர ஜாதி கலவரம்-27 பேர் பலி:பிரதமரை சந்தித்தார் அத்வானி
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் குர்ஜார் இன மக்களின் போராட்டம் ஜாதிக் கலவரமாக மாறியது. இந்த மோதலில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானை சேர்ந்த குர்ஜார் இனமக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக அங்கு கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தை தடுக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 14 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களிலுள்ள குர்ஜார் இனமக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் அரசு குர்ஜார் இனத் தலைவர்களுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் பேராட்டம் ஓயவில்லை.
இந் நிலையில் இந்தப் போராட்டம் சாதிக் கலவரமாக மாறியுள்ளது. குர்ஜார் இன மக்களை எதிர்த்து மீனாஸ் சாதி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மீனாஸ் இனத்தினர் பழங்குடி பிரிவினர் ஆவர்.
இந்த இரு ஜாதியினரும் ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர்.
ராஜஸ்தானில் குர்ஜார் ஜாதி மக்கள் 2 சதவீதம் மட்டுமே உள்ளனர். ஆனால் பழங்குடி பட்டியலிலுள்ள மீனாஸ் இன மக்கள் 12 சதவீதம் உள்ளனர்.
தங்களைவிட அதிகமுள்ள மீனாஸ் இனமக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கும்போது எங்களுக்கு ஏன் தரவில்லை என குர்ஜார் இனமக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
குர்ஜார் இனத்தவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டால் இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் வழங்கப்படும். அதனால் தங்களுடைய இனம் பாதிக்கப்படும் என மீனாஸ் இனத்தவர்கள் கருதுவதால் குர்ஜார்களுக்கு பழங்குடி இன அந்தஸ்து கொடுக்கக் கூடாது என அவர்கள் பதில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நேற்றிரவு முதல் வெடித்த வன்முறையில் இரு தரப்பிலும் 9 பேர் பலியாகியுள்ளனர். தெளசா மாவட்டத்தில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. லால்கோட் அருகே குர்ஜார் இனத்தினரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
போலீஸாரால் இந்த கலவரத்தை கட்டுபடுத்த முடியாததால் ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
குர்ஜார் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டுள்ளதால் குர்ஜார் இனத்தவர்கள் அரசின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.
இந் நிலையில் மீனாஸ் இனத்தவர் சேர்ந்த ஒருவரை குர்ஜார் மக்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும் குர்ஜார் மக்கள் தொடர்பாக அதிக செய்திகளை வெளியிடுவதாகக் டிவி, பத்திரிக்கை நிருபர்கள் மீதும் மீனாஸ் இனத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இதுவரை இந்த கலவரத்தில 27 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பதட்டமான பகுதியில ராணுவ வீரர்கள் ரோந்து வரும் நிலையிலும் கலவரம் தொடர்நது வருகிறது.
இதற்க முடிவு காண முடியாத நிலையில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் பாஜக அரசு தவித்து கொண்டிருக்கிறது.
பிரதமரை சந்தித்தார் அத்வானி:
இந் நிலையில் ராஜஸ்தான் சாதிக் கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் உதவியைக் கோரி பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி மற்றும் மூத்த தலைவர்களே கூடி இந்த பிரச்சனை குறித்து ஆேலாசித்தனர்.வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து பிரதமரை அத்வானி சந்தித்தார்.
இந் நிலையில் ராஜஸ்தான் சாதிக் கலவரத்துக்கு பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே தான் பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுவுள்ளது.












Click it and Unblock the Notifications