கடலூரில் பிடிபட்ட சிங்கள மீனவர்கள் விடுதலை
கடலூர்:கடலூர் அருகே கடலில் திசை மாறி வந்ததாக பிடிபட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த மார்ச் 28ம் தேதி இலங்கையைச் சேர்ந்த இந்த 6 மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திசை மாறி கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் பகுதிக்கு வந்து விட்டனர். அவர்களை கடலூர் புது நகர் போலீஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஆறு பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை மீட்பது குறித்து இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து அவர்களை விடுவிக்க அரசுத் தரப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று 6 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இலங்கைத் துணைத் தூதரக அதிகாரி மகரேஜிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிங்கள மீனவர்களை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ, இலங்கை அதிகாரியிடம் ஒப்படைத்தார். அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.