கருணாநிதி பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்துதிமுக கோலாகல கொண்டாட்டம்
சென்னை:முதல்வர் மு.கருணாநிதியின் 84வது பிறந்த நாளையொட்டி தலைவர்கள் அவருக்கு போனிலும், நேரிலும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகமெங்கும் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் கருணாநிதிக்கு இன்று 84வது வயது பிறந்தது. இதையொட்டி இதுவரை இல்லாத அளவுக்கு பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட திமுகவினர் ஏற்பாடு செய்தனர்.
இன்று காலை 7 மணிக்கு அண்ணா நினைவிடம் சென்ற முதல்வர் கருணாநிதி அங்கு மலர் வளையம் வைத்து வணங்கினார். பின்னர் பெரியார் திடலுக்குச் சென்று, அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் தனது வீட்டில் முக்கியத் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரமுகர்களின் வாழ்த்துக்களை முதல்வர் ஏற்றுக் கொண்டார். முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 3 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இன்று காலை 9 மணி முதல் முதல்வர் கருணாநிதியை, திமுகவினர் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நீண்ட வரிசையில் நின்று கண்டு பரிசுகளை வழங்கி முதல்வரிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
ஜனாதிபதி, பிரதமர், சோனியா வாழ்த்து:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு, நடிகைகள் சரோஜாதேவி, மனோரமா ஆகியோரும் கருணாநிதிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.
தயாநிதி மாறன் வரவில்லை:
இதற்கிடையில் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரை சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
முதல்வரின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் தடபுடலான ஏற்பாடுகளை செய்தனர். நலிந்தோருக்கு உதவிகள், முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள், உடல் ஊனமுற்றோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இன்று இரவு 7 மணிக்கு வேளச்சேரி, கிண்டி ஹால்டா சந்திப்பில் முதல்வர் பிறந்த நாள் சிறப்பு பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.












Click it and Unblock the Notifications