இந்தியா மறுப்பு-சீனாவிடம் தாவிய இலங்கை:37 மில்லியன் டாலருக்கு ஆயுத ஒப்பந்தம்
டெல்லி:விடுதலைப் புலிகளை சமாளிக்கத் தேவையான ஆயுதங்களை வாங்க சீனாவுடன் இலங்கை அரசு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை சீனா வழங்கவுள்ளது.
விடுதலைப் புலிகளின் ராணுவ பலத்தை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. புலிகளின் விமான பலத்தைத் தகர்த்து தாக்குதல் நடத்த தேவையான ஏவுகணைகள், ரேடார் கருவிகளை வழங்குமாறு இந்தியாவை இலங்கை கோரியது.
ஒருவேளை இந்தியா இந்த உதவிகளை செய்ய மறுத்தால் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடம் உதவி கோரப் போவதாகவும் அது மிரட்டல் தொணியில் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் அதிபர் ராஜபக்ஷேவின் தம்பியும், பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்ஷே டெல்லி வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை ரகசியமாக சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புகளில் இலங்கைக்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய இலங்கை அரசு, இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை ஜேன்ஸ் வீக்லி பத்திரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 37.6 மில்லியன் டாலர் அளவுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவைச் சேர்ந்த பாலி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்துடன் இலங்கை அரசு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இலங்கை ராணுவம் மற்றும் கடற்படைக்குத் தேவையான உதவிகளை இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யும். இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கை பாதுகாப்புப் படைக்குத் தேவையான வெடிபொருட்கள், தாக்குதல் ஆயுதங்களை பாலி நிறுவனம் வழங்கவுள்ளதாக ஜேன்ஸ் வீக்லியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications