ஓட ஓட விரட்டி இருவர் படுகொலை-மனைவியே கூலிப்படையை ஏவி கொன்றார்
சென்னை:சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில், பட்டப் பகலில் இருவர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட அன்பு என்பவரின் மனைவிதான் கூலிப்படையை ஏவி அவர்களைக் கொன்றது தெரிய வந்தது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அன்பு. இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சாரதி. இவர் அன்புவின் நெருங்கிய நண்பர் ஆவார்.
சுஜாதாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் தண்டையார்பேட்டை புறநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை தினசரி அன்பு மதியம் போய் பார்த்து வந்தார்.
நேற்றும் தனது நண்பர் சாரதியுடன், சுஜாதாவைப் பார்க்க அன்பு சென்றார். பார்த்து விட்டு இருவரும் வெளியே வந்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் அங்கு வந்து இருவரையும் சூழ்ந்தது.
பயங்கர ஆயுதங்களுடன் தங்களை ஒரு கும்பல் சுற்றிச் சூழ்ந்ததைப் பார்த்து அதிர்ந்த இருவரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் அவர்களை ஓட விடாதபடி தடுத்து முற்றுகையிட்ட அக்கும்பல் சரமாரியாக அரிவாள்களால் வெட்டியும், கட்டைகளால் தாக்கியும் அடித்து நொறுக்கியது.
கடும் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்புவதற்காக இருவரும் ஓடினர். ஆனால் அந்தக் கும்பல் விடாமல் இருவரையும் விரட்டி விரட்டி வெட்டினர். இதில் இருவரும் மருத்துவமனை வாசலில் ரத்த வெள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்தனர்.
மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் இருவர் ஓட ஓட விரட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்ன. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஜோவின் ராஜ் காவலராக இருந்தவர். முறைகேடுகள் செய்ததன் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அதன் பின்னர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தார். தொழில் போட்டியில் பாபு என்பவரின் கோஷ்டியால், ஜோவின்ராஜ், கடந்த 1993ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார் ஜோவின்ராஜ்.
இதையடுத்து தந்தையைக் கொன்ற பாபு உள்ளிட்ட 2 பேரை அடுத்த ஆண்டு அன்பு கொலை செய்தார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர் விடுதலை ஆனார். அதன் பின்னர் அன்புவும் கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தொழிலில் கடும் போட்டி நிலவியதால் உயிருக்குப் பயந்து தொழிலை விட்டு விட்டு புதுவண்ணாரப்பேட்டைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தார்.
இந்த நிலையில் ஜாபர்நிஷா என்ற பெண்ணுடன் அன்புவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. ஜாபர்நிஷா, மும்பையைச் சேர்ந்த ரவுடி சேகரின் மனைவி ஆவார். சேகர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்த ஜாபர்நிஷா, அன்புவின் காதல் வலையில் வீழ்ந்தார்.
இந்தக் கள்ளக்காதலுக்கு ஜாபர்நிஷாவின் மகன் மைதீன்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஜாபர்நிஷாவைச் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார் அன்பு.
இதனால் ஆத்திரமடைந்த மைதீன் கான் 2 மாதங்களுக்கு முன்பு அன்புவைக் கொல்ல முயற்சித்தார். ஆனால் அதில் அன்பு தப்பி விட்டார். இந்த நிலையில்தான் அன்பு கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், அன்புவின் மனைவி சுஜாதாதன் ஆட்களை ஏவி தனது கணவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்தக் கொலையின்போது கூட இருந்த சாரதியும் தேவையில்லாமல் கொல்லப்பட்டு விட்டார்.
ஜாபர்நிஷாவுடன் தனது கணவர் கள்ளக்காதலில் ஈடுபட்டதை விரும்பவில்லை சுஜாதா. இதுகுறித்து தனது தம்பி நித்யாவிடம் கூறி புலம்பியுள்ளார். அவரும், தனது மைத்துனரிடம் கள்ளத்தொடர்பை விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அன்பு கேட்கவில்லை.
இதையடுத்து அன்புவைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார் சுஜாதா. தன்னைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்து நித்யாவிடம், அன்புவைத் தீர்த்துக் கட்டி விடுமாறு கூறியுள்ளார் சுஜாதா. இதையடுத்து நித்யா அடியாட்களை ஏற்பாடு செய்து மைத்துனரைக் கொன்று விட்டார்.
இந்தத் தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து போலீஸார் சுஜாதாவைத் தங்களது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டவுடன் கைது செய்யப்படவுள்ளார். நித்யா மற்றும் கும்பலுக்குப் போலீஸார் வலை வீசியுள்ளனர்.
அவர்களில் நித்யாவின் நண்பர்களான உதயா உள்ளிட்ட 3 பேர் சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் நேற்று மாலையே சரணடைந்து விட்டனர். மேலும் 5 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications