லாட்டரி மார்ட்டின் வீடுகள், அலுவலகங்ளில்அதிரடி ரெய்டு-முக்கிய ஆவணங்கள் சிக்கின
சென்னை:தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை விற்றதாக வந்த புகாரின் பேரில், லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டினின் வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பகுதிகளில் வெளிமாநில லாட்டரிச் சீட்டுக்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
இந்த நிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி டிஎஸ்பி பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்களை தமிழகம் முழுவதும் விற்றதாக கோவை மார்ட்டின் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று கோவை, சென்னையில் உள்ள மார்ட்டினின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மார்ட்டினின் வீட்டில் 3 மணி நேரம் சோதனை நடந்தது. திருவல்லிக்கேணியில் உள்ள அலுவலகத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதேபோல கோவை காந்திபுரத்தில் உள்ள மார்ட்டினுக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை நடந்தது. சுமார் 7 மணி நேரம் இங்கு சோதனை நடந்தது. இங்கும் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.
கோவையை அடுத்த வெள்ளக்கிணறில் உள்ள ஆடம்பர பங்களா, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வீடு, வேணுகோபால் நிறுத்தம் அருகே உள்ளள வீடுகளிலும் சோதனை நடந்தது.












Click it and Unblock the Notifications