பெண்கள், குழந்தைகள் விரும்பினால்ஹெல்மட் அணியலாம்: அரசு சலுகை
சென்னை:இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹெல்மட் அணிவதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளிலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது.
இந்த உத்தரவிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசைக் கோரியிருந்தார். ஆனால் விதி விலக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கட்டாய ஹெல்மட் உத்தரவால் ஆறு மாநகரங்களிலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர், அமர்ந்து செல்வோர் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக 1ம் தேதியன்று ஹெல்மட் அணியாமல் சென்றவர்களைப் பிடித்து போலீஸார் அபராதம் விதித்த முறை, கோர்ட்டுக்கு கூட்டிச் சென்ற விதம் மக்களை, குறிப்பாக பெண்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இதையடுத்து ஹெல்மட் அணியும் உத்தரவை மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி காவல்துறையை அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ஹெல்மட் அணியாதவர்களிடம் போலீஸார் கெடுபிடி எதையும் காட்டவில்லை.
இந்தச் சூழ்நிலையில் இன்று தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் ஹெல்மட் அணிவதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மட் அணியும் கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications