சிங்கத்துடன் பிரசாரம்: பெர்மிஷன் கேட்கும் சுயேச்சை
மதுரை:மதுரை மேற்கு இடைத் தேர்தலில் நிஜமான சிங்கத்துடன் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி தர வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் நடந்து வருகிறது. முக்கியக் கட்சிகளான அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஆகியவற்றின் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சுயேச்சைகள் தொடர்ந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர். அவர்களில் பார்வர்ட் பிளாக் கட்சி (தினகரன் பிரிவு) வேட்பாளர் தினகரனும் ஒருவர்.
இவர் தேர்தல் சின்னமாக சிங்கம் சின்னத்தைக் கேட்டுள்ளார். மேலும், பிரசாரத்தின்போது நிஜமான சிங்கத்தை அழைத்துச் செல்ல அனுமதி தர வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையம், காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு மனுவும் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு பெர்மிஷன் கிடைக்கவில்லை.
கேரளாவைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் கம்பெனி தற்போது திருவனந்தபுரத்தில் முகாமிட்டு சர்க்கஸ் நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தை அணுகி சிங்கத்தை பிரசாரத்தில் ஈடுபடுத்த வாடகைக்குக் கேட்டு வாங்கியுள்ளாராம் தினகரன்.
ரூ. 10 ஆயிரம் பணத்தை சிங்கத்தின் பெயரில் டெபாசிட் செய்துள்ளார். தினரி 750 ரூபாய் வாடகை என்ற ஒப்பந்தத்தின் பேரில் மதுரைக்கு கூட்டி வந்துள்ளார். மதுரை அருகே ஒரு இடத்தில் பாதுகாப்பாக சிங்கத்தை வைத்துப் பராமரித்து வருகிறாராம் தினகரன்.
சிங்கத்தைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள நான்கு பேரை போட்டுள்ளார். தினசரி ரூ. 3000 வரை செலவாகிறதாம் சிங்கத்தைப் பார்த்துக் கொள்வதற்கு. தினமும் 10 முயல்கள், 20 எலி, 20 கி கேரட், 20 கி மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை உணவாக சிங்கத்திற்குக் கொடுக்கிறாராம்.
இவ்வளவு சிரமப்பட்டு சிங்கத்தைப் பராமரித்து வரும் தினகரனுக்கு பிரசாரத்தின்போது சிங்கத்தை நகரில் உலாவாக கொண்டு செல்ல அனுமதி கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.