பாலாறு விவகாரம்: அரசு மீது ராமதாஸ் புகார்
சென்னை:பாலாறு அணை விவகாரம் தொடர்பாக திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பாலாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மெளனமாக இருக்கிறது. ஆந்திர அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு தொடரப்பட்டுள்ளதே தவிர அதன் பிறகு ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. கடந்த இரு வருடமாக இந்தப் பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
சென்னை நகரில் 75 ஆயிரம் பேர் விதிமுறைகளை மீறி கட்டடங்களைக் கட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
மாணவர்களுக்கு கல்விக் கடன் உடனடியாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்தும் கூட வங்கிகள் கடன் அளிக்க மறுக்கின்றன, தாமதம் செய்கின்றன.
தமிழக கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. இதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பு நாளை பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications