மனுத் தாக்கல் செய்தார் ஞானதேசிகன்
சென்னைராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பி.எஸ்.ஞானதேசிகன் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
![]() |
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, திருச்சி சிவா, அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் மைத்ரேயன், இளவரசன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் ராஜா ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து விட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. நேற்று காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் ஞானதேசிகனே அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ஞானதேசிகன். அவருடன் மத்திய அமைச்சர்கள் ராஜா, பழனிமாணிக்கம், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் ஆகியோரும் உடன் சென்றனர்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், யசோதா, அருள் அன்பரசு, விடியல் சேகர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தேர்தல் அதிகாரியான நரேஷ்குப்தாவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ஞானதேசிகன்.
முன்னதாக முதல்வர் கருணாநிதியை ஞானதேசிகன் சந்தித்து ஆசி பெற்றார். வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியை தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.
இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்தது. சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள பத்மராஜனின் மனு தள்ளுபடியாகி விடும் என்பதால் மனு தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகளின் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.













Click it and Unblock the Notifications