மலேசியாவில் விபத்து- இறையன்பு படுகாயம்
சென்னை:மலேசியாவில் நடந்த சாலை விபத்தில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இறையன்பு, சன்வத்ராம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு. அதேபோல, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக இருப்பவர் சன்வத்ராம்.
இரு ஐஏஎஸ் அதிகாரிகளும், மலேசியாவில் அலுவல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கோலாலம்பூர் அருகே உள்ள ஒரு தீவில் அவர்கள் காரில் போய்க் கொண்டிருந்தனர். அப்போது, கார் விபத்தில் சிக்கியது.
இதில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் காயமடைந்தனர். கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.
அதில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இறையன்புவுக்கு ஒரு காலிலும், சன்வத்ராமுக்கு இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவருக்கும் முறிவு ஏற்பட்ட இடத்தில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இருவரும் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.