இலங்கை வன்முறை - பான் கி மூன் கவலை:ஜப்பான் தூதர் கொழும்பு விரைகிறார்
கொழும்பு:இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கவலை தெரிவித்துள்ளார். வன்முறையில், செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரு தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர ஜப்பான் தூதர் கொழும்பு விரைகிறார்.
இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் கொழும்பு அருகே வெள்ளிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த இரு தமிழர்களை போலீஸ் சீருடையில் இருந்த சிலர் கடத்திச் சென்று கொலை செய்தனர். அவர்களின் உடல் 2 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பான் கி மூனின் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
இலங்கையில் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியதாக மாறி வருகிறது. தொண்டு நிறுவன ஊழியர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்றி வந்த 17 தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தற்போது செஞ்சிலுவைச் சங்கத்தின் இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டு அதிர்ச்சி தருவதாக உள்ளதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
17 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணையில் திருப்திகரமான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது கவலை தருகிறது என்றும் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, செஞ்சிலுவைச் சங்கத்தினர் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிபர் ராஜபக்ஷேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராஜபக்ஷே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த கொலைகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவி அளித்து வரும் ஜப்பான் நாட்டின் சார்பில் யஷுகி அகாஷி கொழும்பு கிளம்பியுள்ளார். ஐந்து நாள் பயணமாக இலங்கை வரும் அவர் ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசுகிறார்.
திரிகோணமலை உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் தற்காலிக அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஜப்பான் தூதரின் வருகை குறித்து கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக செயலாளர் ஹிடேகி ஹடனாகா கூறுகையில், தற்போது இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வன்முறைகள், தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்றார்.