தாவூத் கும்பல் மிரட்டல்-தமிழகத்துக்கு தப்பிவந்துள்ள மும்பை வைர வியாபாரி குடும்பம்
நாகர்கோவில்:தீவிரவாதிகளுக்கு பயந்து மும்பையை சேர்ந்த வைர வியாபாரி குடும்பத்துடன் நாகர்கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மும்பை பஞ்ச்கர்ணியை சேர்ந்த வைர வியாபாரி சங்கர் பஜன்லால் ஹேம்தேவ்(40), மனைவி கஞ்சன் ஹேம்தேவ் மற்றும் மகன் ரவி ஹேம்தேவ் ஆகியோர் நேற்று நாகர்கோவில் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு பஜன்லால் கூறுகையில்,
நான் மும்பையில் விலையுயர்ந்த முத்துக்கள், வைரக் கற்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தேன். ஜாதகரீதியில் பிரேஸ்லெட் செய்து கொடுத்து வந்தேன். பிரபலங்கள் பலருக்கும் பிரேஸ்லெட் செய்து தந்துள்ளேன். ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.5,000 முதல் ரூ.50 லட்சம் வரை கிடைக்கும்.
இந் நிலையில் மும்பை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்தவர்கள் என்னை தேடி வந்து அவருடைய மகளுக்கு பிரேஸ்லெட் செய்து தருமாறும், அதற்கு ரூ.1 கோடி தருவதாகவும் கூறினர்.
ஆனால் அதை செய்தால் தீவிரவாதிகளுக்கு உதவியது போல் ஆகும் என்பதால் மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எனக்கு பலவகையிலும் தொந்தரவு அளித்தனர்.
இது குறித்து பஞ்ச்கர்ணி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தேன். இது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இருந்தாலும் அவர்களுடைய ஆட்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
அவர்களுக்கு பயந்து நானும் என் குடும்பமும் சண்டிகார், சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினோம். ஆனாலும் அவர்கள் எங்களை தேடிக் கண்டுபிடித்து மிரட்டினர்.
இது தொடர்பாக சில காவல்துறை உயரதிகாரிகளை சந்தித்து பேசியபோது, தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு சென்றால் தீவிரவாதிகள் தொந்தரவு இருக்காது. அங்கு செல்லுங்கள் என்று ஆலோசனை கூறினர்.
இதனால் நாங்கள் கன்னியாகுமரி வந்துள்ளோம். இங்குள்ள காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். இங்கு நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு தமிழக அரசு தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக நாகர்கோவில் கலெக்டரிடமும் பஜன்லால் மனு கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications