படிக்காத அப்பாவி பயணிகளைஎட்டி உதைத்த ரயில்வே கார்ட்
திருச்சி:ரயிலில் பெட்டி மாறி ஏறிய, இரு படிக்காத பாமர பயணிகளை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய ரயில்வே கார்டின் செயலால் பிற பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கலைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது சகோதரி ரங்கநாயகி. இருவரும் படிக்காதவர்கள். திண்டுக்கலிலிருந்து சென்னை செல்ல டிக்கெட் எடுத்தனர். இருவருக்கும் சேர்த்து ஒரே டிக்கெட் தரப்பட்டிருந்தது.
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது அவசரத்தில் கவனிக்காமல் சகோதரியுடன் மகளிர் பெட்டியில் ஏறி விட்டார் ஆறுமுகம். இதையடுத்து திருச்சி வந்தவுடன் அந்தப் பெட்டியிலிருந்து இறங்கி பொதுப் பெட்டிக்குச் சென்றார்.
அங்கு போன பின்னர்தான் டிக்கெட் தன்னிடம் இல்லை, ரங்கநாயகியிடம் இருப்பதை அறிந்தார். உடனடியாக கீழிறங்கி ரங்கநாயகி இருந்த பெட்டிக்கு ஓடினார். அவரை கீழிறங்கி வருமாறு கூறினார். ஆனால் அதற்குள் ரயில் கிளம்பி விட்டது.
இதையடுத்து அடுத்த பெட்டியில் நின்றிருந்த ரயில்வே கார்டிடம் ரயிலை நிறுத்துமாறு கோரினார். கார்டு ரயிலை நிறுத்தி விட்டு இறங்கி வந்து ஆறுமுகத்தை காலால் எட்டி உதைத்தார். இந்த நிலையில் கீழே இறங்கி விட்ட ரங்கநாயகி, தனது சகோதரரை ரயில்வே கார்டு காலால் உதைத்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மற்ற பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இருவரும் பொதுப் பெட்டியில் போய் ஏறுவற்குள் ரயில் கிளம்ப சிக்னல் காட்டினார் கார்ட். இதையடுத்து ஆறுமுகமும், ரங்கநாயகியும் ரயிலில் ஏற முடியாமல் போனது.
அடுத்து நடந்ததுதான் அதை விட பெரிய கொடுமை. தங்களுக்கு நேர்ந்த கதி குறித்து அங்கிருந்த ரயில்வே காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் கூறினார். அப்போது அங்கிருந்த காவலர்கள் ஆறுமுகம் வைத்திருந்த டிக்கெட்டைப் பிடுங்கிக் கொண்டனர். மேலும் அவர் வைத்திருந்த கொஞ்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு அனுப்பி விட்டனர்.
இப்படி ரயில்வே கார்டால் துரத்தப்பட்டும், காவலர்களால் பணம் பறிக்கப்பட்டும் பரிதவித்த இருவருக்கும், அங்கிருந்த பயணிகள் ஆளுக்குக் கொஞ்சமாக பணம் கொடுத்து வேறு ரயிலில் செல்லுமாறு அறிவுரை கூறினர்.