பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம்:பாமக கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடமிருந்து அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை எதிர்த்து இன்று தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடந்த போராட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் மணி பேசுகையில்,
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மாணவர்களின் படிப்பை தொடர்வதில் பிரச்சனை எழுகிறது.
இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது. அந்த சட்டங்களை யாரும் பின்பற்றுவதில்லை.
அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
தமிழகத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவது பாராட்டுதலுக்குரியது. மற்ற நிறுவனங்களும் இதை செயல்படுத்த வேண்டும் என்றார் மணி.