ஹைதராபாத்: 3வது அணிக் கூட்டத்தில் வைகோவும் பங்கேற்பு
சென்னை:ஹைதராபாத்தில் நாளை நடைபெறவுள்ள 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொள்கிறார். ஜெயலலிதா அழைப்பை ஏற்று வைகோ ஹைதராபாத் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தேசிய அளவில் புதிதாக ஒரு அணி உருவாக்கப்பட்டு வருகிறது. அதிமுக, தெலுங்குதேசம், சமாஜ்வாடிக் கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளன.
இந்த அணித் தலைவர்கள் சமீபத்தில் உ.பி தேர்தல் பிரசாரத்தின்போது கூடிப் பேசினர். இக்கூட்டத்தில் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். இந்த நிலையில், நாளை ஹைதராபாத்தில் 3வது அணித் தலைவர்கள் கூட்டத்தை சந்திரபாபு நாயுடு கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
இதில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு அவர் ஹைதராபாத் செல்கிறார். இந்த நிலையில் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, 3வது அணிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வைகோவுக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. அதை வைகோவும் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து மதிமுக சார்பில் வெளியான செய்திகுறிப்பில், ஹைதராபாத் கூட்டத்தில் வைகோ பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதா, வைகோ சந்திப்பின்போது மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல், ராஜ்யசபா தேர்தல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.