3வது அணிக்கு தலைவர் ஜெயலலிதா?
சென்னை:ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 8 கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்து தொடங்கியுள்ள 3வது அணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைவராவார் எனத் தெரிகிறது.
ஹைதராபாத்தில் நேற்று 3வது அணி குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாயுடு வீட்டில் நடந்தது. இக்கூட்டத்தில் ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட 8 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 3வது அணி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த கட்ட கூட்டம் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஹைதராபாத்தில் நேற்று 3வது அணி குறித்து ஆலோசனை நடத்தினோம். இதில் பல மாநில முன்னாள் முதல்வர்கள், அரசில் இடம் பெறாத கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக உருவாகவிருக்கும் இந்த 3வது அணி மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கும்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் குறித்து, காங்கிரஸ், பாஜக அல்லாத பிற கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி எங்களது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்போம்.
மாநிலக் கட்சிகள் தற்போது வலுவடைந்து வருகின்றன. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் பிராந்தியக் கட்சிகளின் பங்கு முக்கியமானது.
3வது அணி குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை எப்போது நடத்துவது என்பதை ஜெயலலிதா முடிவு செய்வார் என்றார்.
இக் கூட்டணிக்கு ஜெயலலிதாவையே தலைவராக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.