எனக்கு மட்டும்தான் அட்வைஸா?:ஜெவுக்கு விஜயகாந்த் நோஸ்-கட்
மதுரை: என் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது எனக்கு ஏகப்பட்ட அட்வைஸ் கொடுத்த ஜெயலலிதா, இப்ேபாது கொடநாடு விவகாரத்தில் கொக்கரிப்பது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை நேற்று இரவு அறிவித்தார் விஜயகாந்த். வேட்பாளர் சிவமுத்துக்குமாரையும் அவர் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்கு தொகுதியில், தேமுதிகவின் பிரசார உத்தி குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. பிரச்சாரத்திற்கு செல்லும் போது அங்குள்ள நிலவரங்களை வைத்து பிரச்சாரம் செய்வேன். வெற்றி பெற தேவையான கருத்துகளை மட்டும் பேசுவேன். மற்ற கட்சிகள் போல் இட்டுகட்டி பேச மாட்டேன்.
கட்சி ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 50 ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்களிடமிருந்தும் கூட ஆட்கள் வெளியேறுகிறார்கள். வேறு கட்சிக்கு தாவுகிறார்கள்.
எங்கள் கட்சி கவுன்சிலர்களை மிரட்டுவதாக கூறப்படுகிறது. அவர்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வீட்டிற்கு சென்று கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் சென்றால், சுயேட்சை கவுன்சிலர்கள்தானே என்று கூறுவார்கள். கடந்த சட்டசபை தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கிடைத்த ஓட்டுகளின் சதவீத அடிப்படையில் எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 3 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்படும் என்ற சட்டத்தின் கீழ் எங்களுக்கு அங்கீகாரம் மறுக்கப்பட்டுவிட்டது.
கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தங்களுக்கு சாதகமான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அரசியலுக்கு வந்தபின் நான் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
சட்டவிதிகள் இவ்வாறு இருக்கும் போது தேர்தல் ஆணையம் என்ன செய்ய முடியும்.
என்னுடைய மண்டபம் இடிக்கப்பட்டது திட்டமிட்ட சதி, அங்கு மேம்பாலம் எதுவும் வரவில்லை. தரைவழிப்பாதை தான் செல்கிறது. அதற்கு மாற்று திட்டம் கொடுத்தும் அதை கண்டுக் கொள்ளாமல் இடித்திருக்கிறார்கள்.
என் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தபோது இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று அறிவுரை கூறிய ஜெயலலிதா இப்போது அவருடைய கொடநாடு பங்களாவில் அதிகாரிகள் சோதனைக்கு செல்கிறார்கள் என்றதும் கொக்கரிப்பது ஏன்?
அதிமுகவும், திமுகவும் சொத்துக்களை பாதுகாக்கவே இயக்கத்தை பயன்படுத்துகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் அவர் மீது நடந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தால் நீதி கிடைக்காது, வேறு மாநிலத்திற்கு மாற்றவேண்டும் என திமுக பொது செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் இப்போது அவர்கள் ஆட்சியில் திமுக ஆட்சி கால மேம்பால ஊழல் வழக்குகள் எல்லாம் வேக வேகமாக முடிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் எங்களின் பெரும்பாலான வேட்பாளர்கள் முரசு சின்னத்தில் போட்டியிட்டனர். இப்போதும் அந்த சின்னத்தை கோருவோம். அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
கூட்டுறவு சங்க தேர்தல் குறித்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அவர்கள் கட்சியில் பழம் பெருச்சாளிகள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் எங்களிடம் இளைஞர்கள் மட்டுமே உள்ளனர்.
திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டுவதை விட ஓட்டு வங்கியை குறி வைத்தே ஆட்சி நடத்துகிறது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது ஏழைகளின் குழந்தைகள் உயரவேண்டும் என்ற நோக்கத்தோடு நுழைவு தேர்வு கொண்டுவந்தார்.
ஆனால் இப்போது இடஒதுக்கீடு என்ற என்ற முறையில் ஏழை மக்களின் குழந்தைகளுக்கு சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும். ஆனால் இப்போது இடஒதுக்கீடு வசதி படைத்தவர்களே பயன்படுத்தி கொள்கி்றார்கள்.
ஒரு சட்டத்தை கொண்டு வந்தால் அரசு அதை மதிக்க வேண்டும். ஹெல்மட் அணிய வேண்டும் என்கிறார்களா, வேண்டாம் என்கிறார்களா என்று தெளிவாகத் தெரியவில்லை.
வாகனத்தை ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணியவேண்டும் என்றால் பின்னால் அமர்பவர்களின் உயிர் மீது அவர்களுக்கு அக்கறை இல்லையா. சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிற வகையில் செயல்படுத்த வேண்டும்.
ராஜ்யசபா தேர்தலில், அதிமுக என்னிடம் ஆதரவு கேட்டு விடக் கூடாது என்பதற்காக போட்டியை தவிர்த்திருக்கிறது திமுக.
சொத்துக்காக போட்டி போட்டுக் கொள்ளும் இவர்கள் பதவிகளை அனுபவிக்க மட்டும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். இது அரசியலுக்கு உகந்ததல்ல.
ஒரு கட்சியின் வாரிசு யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். இப்போது புதிய தலைவர்களை திணிக்க பார்க்கிறார்கள். இது நல்லதல்ல என்றார் விஜயகாந்த்.