ஜெ.,சசிக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள்வந்தது எப்படி-சந்திரலேகா கேள்வி
சென்னை:ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கும், வீடியோ கடை நடத்தி வந்த சசிகலாவுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் வந்தது எப்படி, கோடநாடு, சிறுதாவூர் பங்களாக்களை வாங்க பணம் வந்தது எப்படி என்றுஜனதாக் கட்சித் தலைவர் சந்திரலேகா கேட்டுள்ளார்.
அதிமுகவின் கொடும்பாவி எரிப்பு, சாலை மறியல், அடிதடி, ரகளை போராட்டம் குறித்து சந்திரலேகா விடுத்துள்ள அறிக்கை,
எம்.ஜி.ஆரால் கட்சிக்கு வழங்கப்பட்டு, அன்று முதல் அதிமுகவின் தலைமைக் கழகமாக செயல்பட்டு வந்த கட்டடத்தை இடிக்க நோட்டீஸ் அனுப்பியபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத அதிமுகவினர், ஜெயலலிதாவின் தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க தெருவுக்கு வந்து போராடுவதும், கடமையைச் செய்த வானூர் இன்ஸ்பெக்டரை தீவைத்துக் கொளுத்த முயற்சித்ததும் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா தன்னுடையது இல்லை என்றும் தோழி சசிகலாவுடையது என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவோ அல்லது சசிகலாவோ அரச பரம்பரையினரோ அல்லது பரம்பரை பணக்காரர்களோ கிடையாது.
இன்னும் சொல்வதானால், முதல்வராவற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டன் வீடு மட்டுமே சொந்தமாக இருந்தது. முதல்வராக ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார். சசிகலாவுக்கும் சொந்த வீடு என்று ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கிடையாது. வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சசிகலா நடத்தி வந்த வீடியோ கடையிலிருந்தும் கோடிக்கணக்கான வருமானம் வர வாய்ப்பு இல்லாதபோது, கோடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என குறுகிய கால கட்டத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் வந்தது எப்படி என்பதை ஜெயலலிதா மக்களுக்கு விளக்க வேண்டும்.
கோடநாடு எஸ்டேட் குறித்து முதல்வர் கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக தவறு என்று நிரூபிப்பதை விட்டு விட்டு தான் பழிவாங்கப்படுவதாக கூறுவதும், கட்சிக்காரர்களைத் தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்வதும் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
ஜெயலலிதாவும், சசிகலாவும் கோடநாடு எஸ்டேட்டில் தலா ரூ. 2 கோடி பணத்தை முதலீடு செய்ததற்குண்டான பணம் எங்கிருந்து வந்தது என்பதை ஆதாரத்துடன் அவர்கள் விளக்க வேண்டும்.
சுப்ரமணிய சுவாமி முயற்சியால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக ஜெயலலிதா மீது உள்ள வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அதை நடத்த விடாமல் ஜெயலலிதா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
கோடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதை ஜனதாக் கட்சி வரவேற்கிறது என்று கூறியுள்ளார் சந்திரலேகா.
ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, ஜெயலலிதா மீது சாப்ட்டான அணுகுமுறையை கையாண்டு கொண்டுள்ள நிலையில் சந்திரலேகா படு காட்டமாக ஜெயலலிதாவைத் தாக்கி அறிக்கை விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications