எஸ்கேப் ஆன அதிமுகவினர்-சிக்கலில் போலீஸ்
கரூர்:போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் அதிமுகவினர் காணாமல் போய் விட்டதால் கரூர் போலீஸார் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்று முதல்வர் கருணாநிதியைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். கரூரில் இது பெரும் கலவரமாக மாறியது.
போராட்டம் நடத்திய அதிமுகவினர் மீது திமுகவினர் கடுமையாக தாக்கினர். இதனால் கரூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, பெரும் பதட்டமும் நிலவியது.
இந்த மோதலைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உள்ளிட்ட 272 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போன பின்னர்தான் அதிமுகவினரில் பலர் மது போதையில் இருந்தது தெரிய வந்ததாம்.
அவர்களை நீதிபதி முன் எப்படி ஆஜர்படுத்துவது என்று குழம்பினர் போலீஸார். பின்னர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் மட்டும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஆஜர்படுத்தப்படாத அதிமுகவினரில் பலர் தலைமறைவாகி விட்டார்களாம். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் அதிமுகவினர் தலைமறைவாகி விட்டதால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி சரக டிஐஜி பொறுப்பை வகிக்கும் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜூவால் கரூர் விரைந்துள்ளார். கைது செய்யப்பட்ட அதிமுகவினர் எப்படி தப்பினர் என்று அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
தப்பியவர்களைப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவான அதிமுகவினரைப் பிடிக்க வாகனங்களுடன் போலீஸார் கரூரை வலம் வந்து கொண்டுள்ளனராம்.
அதிமுக நிர்வாகிகளையும் போலீஸார் அணுகியுள்ளனராம். ஆனால் போலீஸ் கையில் சிக்காமல் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு நிர்வாகிகளும் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்கிறார்களாம்.
தலைமறைவானவர்களைப் பிடிக்காவிட்டால் அத்தனை போலீஸார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலிடத்திலிருந்து எச்சரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications