அதிமுகவினரை விடுவிக்க அரசு உத்தரவு
சென்னை:தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரை விடுவிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தரக்குறைவாகவும், இரட்டை அர்த்தத்திலும் விமர்சித்து பேசியும், எழுதியும் வரும் முதல்வர் கருணாநிதியைக் கண்டித்து கடந்த 7ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
இதில் பெரும் வன்முறை மூண்டது. குறிப்பாக கரூரில், அதிமுகவினர் மீது திமுகவினர் கடும் தாக்குதல் தொடுத்தனர். இதில் பல அதிமுகவினர் படுகாயம் அடைந்தனர்.
போராட்டம் நடத்திய அதிமுகவினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் அடங்குவர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அதிமுகவினரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று மாலைக்குள் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 12 ஆயிரத்து 115 பேர் கைது செய்யப்பட்டதாக ஏற்கனவே டிஜிபி முகர்ஜி தெரிவித்துள்ளார். இவர்ளில் 692 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு செய்து அதிமுகவினரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினரை விடுவிக்க அரசு உத்தரவிட்டாலும் கூட, விழுப்புரம் மாவட்டம் வானூரில் இன்ஸ்பெக்டர் கணபதியை உயிரோடு கொளுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications